குறளரங்க இணையதளத்திற்கு உங்களை இனிதே வரவேற்கிறோம்
7/31/2010

திருக்குறள் அரங்கம் -2

குறளரங்கப் பாட்டரங்கம் - 2
தேமதுரத் தமிழோசை

எங்கும் தமிழே ஒலிக்கட்டும்!
    இணைந்து தமிழர் உழைக்கட்டும்!
பொங்கும் அமுதத் தமிழ்ச்சீரைப்
    புவியோர் உண்டு களிக்கட்டும்!
அங்கும் இங்கும் நாய்போன்றே
    அலையும் ஆசை அகலட்டும்!
சங்கே முழங்கு! வான்வெளியைத்
    தாண்டும்! தாண்டும்! தமிழோசை!

குளிர்ந்த இளநீர் தருமினிமை!
    கொஞ்சும் குமரி தருமின்பம்!
மலர்ந்த மலர்கள் தரும்சுவைத்தேன்!
    மகிழ்வை ஊட்டும் மழலைமொழி!
வளர்ந்த பலா..மா தரும்கனிகள்!
    வள்ளல் பசுக்கள் தரும்நற்பால்!
விளைந்த பசுமை! அத்தனையும்
    விஞ்சும்! விஞசும் தமிழோசை!

ப+க்கள் மலரும் பேரழகாய்ப்
    புலவர் பாடும் மெல்லோசை!
ஈக்கள் பறந்து தேனுண்டே
    இணையும் சேர்க்கை இன்னோசை!
ஆக்கம் ஊட்டும் ஆற்றலுடன்
    ஆளும் திண்மை வல்லோசை!
ஊக்கம் தந்து தமிழுணர்வை
    ஊட்டும் என்றன் தமிழோசை!

கண்ணன் மீட்டும் குழலோசை!
    காதல் ஊட்டும் வளையோசை!
மன்னன் மாண்பின் மணியோசை!
    மருளை நீக்கும் அருளோசை!
வண்ண மயிலின் அருமோசை!
    சின்னக் குயிலின் குரலோசை!
எண்ணம் நிறைந்தே உயிராக
    இனிக்கும்! இனிக்கும் தமிழோசை!

- கவிஞர் கி. பாரதிதாசன்

(எண்சீர் விருத்தம்)

எண்சீர் விருத்தம்

தேமதுரத் தமிழோசை தென்றலெனத் தழுவித்
  தீPஞ்சுவையாய் இனித்ததுமோர் திகட்டாத காலம்!
பாமரரும் செவிகுளிரப் பாட்டிசைத்து வாழ்வில்
  பசுஞ்சோலை மலராகப் பூத்திருந்த நேரம்!
தாமருந்தும் கூழ்கூடத் தரணியிலே பசியில்
  தவிப்பவர்க்கு முன்வந்து தரத்துடிக்கும் உள்ளம்!
காமத்தீ அவித்துண்மைக் காதலினால் கலந்து
  கண்கவரும் கனியமுதைக் கொஞ்சியவன் தமிழன்!

நாட்டினையே சொத்தாக நாள்தோறும் எண்ணி
  நாடிவரும் அயலவரை நாவினிக்க அழைத்து
வீட்டினிலே உற்றவரை விலக்காமல் காத்;து
  விண்ணவனாய் மண்ணதிலே விளங்கியவன் தமிழன்!
காட்டினிலே உலவுகின்ற கடும்விலங்காய் இன்று
  கட்டறுந்த செயலதனால் கருத்தழிந்தான் ஏனோ! 
காட்டாற்று வெள்ளமெனக் கரைபுரளும் ஆசை
  கவிந்துநின்று அவன்மனதைக் கரைப்பதுவும் ஏனோ!

தாய்மொழியின் உணர்வின்றித் தமிழ்மொழியைச் சிதைத்துத்
  தன்னாட்டின் பெருமைதனைத் தனிநலத்தால் குலைத்து
ஆய்ந்துணரா வகையினிலே ஆன்றோரின் மேன்மை
  அறிந்திடாத நிலைமாற்றி அன்னவனும் இனிமேல்
தீய்ந்துவரும் உறவுகளைத் தேடிவந்து போற்றித்
  தீமைதனை அகற்றியுடன் திருந்துகின்ற நிலையில்
தேய்ந்துவரும் தேமதுரத் தமிழோசை மீண்டும்
  திக்கெட்டும் நாட்டினிலே தேனமுதாய் நிறையும்!

- கவிதாயினி இராசேசுவரி சிமோன


நாடுவிட்டு நாடுவந்த பின்பும் கூட
   நம்மொழியின் மேல்பற்றே உள்ள தையா!
கூடுவிட்டுக் கூடுபாயம் மாயம் போலக்
    குடிகொண்டு பிரென்சுமொழி வந்த தையா!
வீடுவிட்டு வெளிசென்றால் விருப்ப மின்றி
   வேற்றுமொழி பேசியாக வேண்டு மையா! 
கோடுபோட்டு வாழ்ந்தாலும் கொள்கை தன்னை
   கூறுபோட்டு விற்கவேண்டி உள்ள தையா!

மேசைநிறைய புத்தகங்கள் இருந்த போதும்
   மெய்யறிவு படித்திடாமல் வந்தி டாது!
வீசைஎன்ன விலையென்று கேட்டுக் காசை
   வீசியெரிய உண்மையன்பு கிடைத்தி டாது!
ஓசையுடன் பாட்டெழுதிப் படைத்திட் டாலும்
   உள்ளிருக்கும் வாசகங்கள் புரிந்தி டாது!
காசைத்தேடும் உலகத்தில் வாழ்ந்த போதும்;
   கவிதைமொழி தமிழருக்குக் கசந்தி டாது!

நம்மொழியின் மேல்பற்று உள்ள தனால்
   நாட்டமுடன் வந்துமாதம் கூடு கின்றோம்!
எம்மொழிக்கு இணையாக வேற்று மொழி
   இருந்திருந்தால் மனமங்கு சென்று விடும்!
செம்மொழியாய்த் தேமதுரத் தமிழின் னோசை
   செழிப்பாக கேட்டிடவே காத்து நிற்போம்!
இம்முறையும் எந்தமிழின் இனிமை கேட்டு
   இன்பமிதே! வேறில்லை என்று சொல்வோம்!

தென்னவரின் தேமதுரத் தமிழின் ஓசை
   தேடியதைக் காதினிக்கக் கேட்டுக் கொண்டே
அன்னமிடும் குணாவின்கைப் பக்கு வத்தை
   ஆசையுடன் அள்ளியள்ளி உண்ட போதே
விண்ணமுதம் என்பதெல்லாம் விண்ணில் இல்லை
   வீட்டினிலே விருந்தோம்பும் பெண்ணி ருந்தால்
மண்ணுலகில் விண்ணுலகம் வந்து சேர்ந்து
   எண்ணமெல்லாம் தமிழோசை கேட்டே ஆடும்!

- கவிதாயினி அருணா செல்வம்

எண்சீர் விருத்தம்.

தூமணிகள்  பதித்திட்ட  மாடக்  கூடல் 
    தொன்மைஒளிர்  கலைநுட்பம்  விளங்கித்  தோன்றும்
மாமதுரை  நகரினிலே  சங்கம்  வைத்து
    மாமன்னர்  பெரும்புலவர்  பல்லோர்  கூடித்
தேமதுரத்  தமிழினிலே யாத்து  வந்த
    தித்திக்கும்  இலக்கியங்கள்  ஆய்வு செய்து
சேமமுறும்  வழிகளையே  சுட்டிக்  காட்டிச
    செயல்படவே  ஊக்குவிக்கும்  நீதி  நூல்கள்

உலகெங்கும்  வாழ்கின்ற  தமிழர்  கொண்ட
    ஊக்கத்தால்  எத்துறையும்  மேன்மை  கண்டே
நிலைத்திருக்கும்  பைந்தமிழின்  சீர்மை  எல்லாம்
    நிலவுலகில்   எத்திசையும்  பரவச்  செய்தே
கலைமிகுந்த  முத்தமிழின்  கழகம்  தொற்றிக்
    கவின்கலையால்  தமிழோசை  நிரப்பு  கின்றார்
மலையனைய  பெரும்புகழைச  சேர்த்து  நித்தம்
    மாலைகலாய்ச  சூட்டுகின்றார்  எங்கள் தாய்க்கே!

அண்டங்கள்  கோடியதாய்  ஆக்கி  வைத்து
    அகிலங்கள்  உளவாக்கி  ஆட்டு  வித்துக்
கண்டங்கள்  உருவாக்கி  உயிர்கள் யாவும்
    கருத்துடனே  படைத்தனில்  மாந்தர் மட்டும்
பண்புடனே  ஆறறிவும்  அடைந்து நாளும்
    பாங்குடனே  வாழவைக்கும்  தமிழே! தாயே!
தண்ணமுதாம்  தமிழ்மொழியை  நாடு தோறும்
    தழைத்திடச்செய்  ஆற்றலினைத தருவாய்  நீயே!

- கவிஞர் தேவராசு

வெண்பா!

அழகுமிளிர் சந்தநடை ஆழ்ந்தகலைச் சொற்கள்
பழகிவரும் ஓசைஎழில் பைந்தமிழே -யாழும்
குழலும்சே ரேழிசையின் தேமதுர இன்பம்
வழங்கிடும் நற்சீரோங்கும் வாழ்வு!
               
அறுசீர் விருத்தம்

தொட்டில் தன்னில் தாலாட்டும்
    துள்ளும்  குழந்தைக் கிசைப்பாட்டும்
வட்டக் கும்மி எழிபாட்டும்
    வாகாய்க் குழையும் ஒய்ல்பாட்டும்
எட்டி நாற்று நடும்பாட்டும்
    ஏற்ற மிறைக்க ஒருபாட்டம்
சொட்டும் காதல் சுவைப்பாட்டும்
    சுகமாய் உள்ளம் தழுவிடுமே!

பேசும் விதத்தில் சொல்விடையும்
    பேச்சில் உதிக்கும் பழமொழியும்
வீசும் தென்றல் காற்றோடு
    மிதந்து வருடும் தேம்மாங்கும்
ஆசு கவிபோல் யாவர்க்கும்
    அமுதாய்ச சுரந்த இன்பத்தை
காசுக் காகத் தமிழ்விற்கும்
    காலத் தில்நாம் காணலையே!
                                               
- சரோசா தேவராசு .
                                                                                                

 


குறளரங்கம் 7




கோப்புகள்


தெள்ளு தமிழ்நடை,
சின்னஞ் சிறிய இரண்டடிகள்,
அள்ளு தொறுஞ்சுவை
உள்ளுந் தொறும்உணர் வாகும்வண்ணம்
கொள்ளும் அறம்,பொருள்
இன்பம் அனைத்தும் கொடுத்ததிரு
வள்ளுவ னைப்பெற்ற
தாற்பெற்ற தேபுகழ் வையகமே!

வெல்லாத இல்லை
திருவள் ளுவன்வாய் விளைத்தவற்றுள்
பொல்லாத தில்லை
புரைதீர்ந்த வாழ்வினி லேஅழைத்துச்
செல்லாத தில்லை
பொதுமறை யான திருக்குறளில்
இல்லாத தில்லை
இணையில்லை முப்பாலுக் கிந்நிலத்தே!

தொன்னூற் படியில்லை!
திராவிடர் தூய கலைஒழுக்கம்
பின்னூற் படியிற்
பெரும்படி இல்லை! பிழைபடியா
அந்நூற் படிதிரு
வள்ளுவன் தந்தனன் ஆயிரத்து
முந்நூற்று முப்பதும்
முத்தாக மூன்று படியளந்தே!

கன்னல் இதுஎனக்
காட்டியே மக்கள் கடித்துணுமோர்
இன்னல் தராது
பருகுக சாறென ஈவதுபோல்
பின்னல் அகற்றிப்
பிழைதீர் நெறிஇது பேணிர்என்றே
பன்னல் உடையது
வள்ளுவன் முப்பாற் பனுவலொன்றே!

வித்திப் பிழைக்கும்
உழவனும் வேந்தனும் நாடனைத்தும்
ஒத்துப் பிழைக்க
வழிகாட்டி வள்ளுவன் ஓதியநூல்.
எத்துப் பழுத்தவர்
ஏமாற்றும் ஆரியர் நான்மறைபோல்
அத்திப் பழமன்று;
தித்திக்கும் முப்பழம் ஆம்படிக்கே!

-பாவேந்தர் பாரதிதாசன்

பக்க எண்ணி

Blogger இயக்குவது.