குறளரங்க இணையதளத்திற்கு உங்களை இனிதே வரவேற்கிறோம்
9/11/2011

திருக்குறளரங்கம் -14

அன்பிற்கினிய  அருந்தமிழ்  ஆர்வலர்களே! வணக்கம்!
                       கம்பன் கழக மகளிரணியினர்  திங்கள்தோறும் தொடர்ந்து நடத்திவரும், 'குறள்அரங்கம்',  கடந்த 18 .09 .2011 ஞாயிறன்றுக்  கம்பன் கழகத்  தலைவர், கவிஞர் கி. பாரதிதாசன்  அவர்கள் இல்லத்தில்  சிறப்பாக  நடந்தேறியது.  அன்று பிற்பகல் மூன்று மணிக்குத் தொடங்கியபதினான்காம் குறள்அரங்கம் நிகழ்ச்சியில் திருமதி சரோசா தேவராசு  அவர்கள், இறைவணக்கம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்துப்  பாடல்களைப்   பாடினார்.
                        தமிழெனும் அமுதைச்  மாந்தத் தங்கள் இல்லத்திற்கு  வருகை  புரிந்த  அனைவரையும் ,  கவிஞர் கி. பாரதிதாசன்  அவர்கள்  வரவேற்று  இனிய வரவேற்புரை  வழங்கினார் . வரவேற்பைத்  தொடர்ந்து, திருக்குறளில்,அறுநூற்று  ஒன்றாவது  குறள் முதல் அறுநூற்று ஐம்பதாம் குறள்  வரை,ஐம்பது குறட்பாக்கள் அனைவராலும் படிக்கப்பட்டு, ஐந்து பேர்களால் தனித்தனியாக ஒவ்வோர் அதிகாரத்திற்கும்  விளக்கமளிக்கப்  பட்டன. 'மடியின்மை'   திருமிகு கி.அசோகன்  அவர்களாலும், 'ஆள்வினையுடைமை' திருமிகு தணிகா சமரசம் அவர்களாலும்,'இடுக்கண் அழியாமை'  திருமதி சரோசா தேவராசு அவர்களாலும், 'அமைச்சு' கவிஞர் கி. பாரதிதாசன்  அவர்களாலும்,'சொல்வன்மை' பேராசிரியர் லெபோ பெஞ்சமின் அவர்களாலும்  தெளிவாகவும் நல்லபல  கருத்துக்களுடனும்  அளிக்கப்பட விளக்கவுரைகள்  நிறைவைத் தந்தன. அடுத்ததாகச்  சிறப்புச்  சொற்பொழிவு நிகழ்ச்சியில் "தில்லையும்  திருவரங்கமும்"  என்னும்  தலைப்பில் கவிஞர் கி.பாரதிதாசன்  அவர்கள் ஆன்மீகப்  பார்வையில்  இரண்டு  கோவில்களையும் பற்றிய அரிய பல செய்திகளுடன்  சொற்பொழிவை
ஆற்றினார்.திருக்குறள் அரங்கின்  போதும்  சிறப்புச்  சொற்பொழிவினைத்  தொடர்ந்தும் பேராசிரியர் லெபோ பெஞ்சமின்  அவர்கள்  எடுத்துக் கூறிய  பல செய்திகள்  அரங்கிற்கு  மேலும்  சுவை சேர்த்தன. சிறப்புச் சொற்பொழிவைத்  தொடர்ந்து ஒரு சிறிய  தேநீர்  விருந்திற்குப்  பிறகு "கவிதை அரங்கம்" நிகழ்ச்சி களைகட்டியது.
                           "கனவுகள்"  என்னும் தலைப்பில் கவிஞர் கி.பாரதிதாசன்  அவர்கள்  தலைமையில் , கவிஞர்கள்  தங்கள்  கற்பனைகளையும்  ஆசைகளையும்  வண்ண  வண்ணக்  கனவுகளாய்  வடித்துக்  காட்டினர். கவிஞர்கள்:லெபோ பெஞ்சமின், வே.தேவராசு,இராசேசுவரி சிமோன்,தணிகா சமரசம, பழ.சிவஅரி,  லூசியா லெபோ, சரோசா தேவராசு, லிங்கம் செயமாமல்லன், மதிவாணன், கோமதி சிவஅரி ஆகியோர் கலந்துகொண்டுச் சிறப்பித்தனர் நிறைவாகத்  திருமதி  குணசுந்தரி பாரதிதாசன் அவர்களின் கைமணத்தில் அன்பையும் கலந்து  கொடுத்த  இரவு விருந்தில் அனைவருடைய  மனமும்  வயிறும் நிறைய  அன்றைய 'குறள் அரங்கம்' நிகழ்வுகள் இனிதே நிறைவெய்தின.
                                                    -'தாமரை'

0 கருத்துகள்:

குறளரங்கம் 7




கோப்புகள்


தெள்ளு தமிழ்நடை,
சின்னஞ் சிறிய இரண்டடிகள்,
அள்ளு தொறுஞ்சுவை
உள்ளுந் தொறும்உணர் வாகும்வண்ணம்
கொள்ளும் அறம்,பொருள்
இன்பம் அனைத்தும் கொடுத்ததிரு
வள்ளுவ னைப்பெற்ற
தாற்பெற்ற தேபுகழ் வையகமே!

வெல்லாத இல்லை
திருவள் ளுவன்வாய் விளைத்தவற்றுள்
பொல்லாத தில்லை
புரைதீர்ந்த வாழ்வினி லேஅழைத்துச்
செல்லாத தில்லை
பொதுமறை யான திருக்குறளில்
இல்லாத தில்லை
இணையில்லை முப்பாலுக் கிந்நிலத்தே!

தொன்னூற் படியில்லை!
திராவிடர் தூய கலைஒழுக்கம்
பின்னூற் படியிற்
பெரும்படி இல்லை! பிழைபடியா
அந்நூற் படிதிரு
வள்ளுவன் தந்தனன் ஆயிரத்து
முந்நூற்று முப்பதும்
முத்தாக மூன்று படியளந்தே!

கன்னல் இதுஎனக்
காட்டியே மக்கள் கடித்துணுமோர்
இன்னல் தராது
பருகுக சாறென ஈவதுபோல்
பின்னல் அகற்றிப்
பிழைதீர் நெறிஇது பேணிர்என்றே
பன்னல் உடையது
வள்ளுவன் முப்பாற் பனுவலொன்றே!

வித்திப் பிழைக்கும்
உழவனும் வேந்தனும் நாடனைத்தும்
ஒத்துப் பிழைக்க
வழிகாட்டி வள்ளுவன் ஓதியநூல்.
எத்துப் பழுத்தவர்
ஏமாற்றும் ஆரியர் நான்மறைபோல்
அத்திப் பழமன்று;
தித்திக்கும் முப்பழம் ஆம்படிக்கே!

-பாவேந்தர் பாரதிதாசன்

பக்க எண்ணி

Blogger இயக்குவது.